Published : 29 Oct 2023 03:43 AM
Last Updated : 29 Oct 2023 03:43 AM

தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளியையொட்டி நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் 10,595 சிறப்பு பேருந்துகளும் நவ.13 முதல் 15 வரை 6,992 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திரரெட்டி, சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், ஆணையர் சண்முகசுந்தரம், காவல்துறை, அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 9 முதல் 11-ம் தேதி வரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 5,920 சிறப்புபேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, 3 நாட்களும் சேர்த்து 10,595 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், நவ.13 முதல் 15-ம் தேதி வரை பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 3,825 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இதன்படி, 3 நாட்களும் 6,992 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு 6 நாட்களும் சேர்த்து 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தற்காலிக பேருந்து நிலையங்கள்: சென்னையை பொருத்த வரை 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் வாயிலாக இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸில் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை) இருந்து இயக்கப்படும். மேற்கூறிய ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்.

இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் 1 என 11 முன்பதிவு மையங்கள் செயல்படவுள்ளன. பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்றடையும். இந்த பேருந்துகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகார் அளிக்க..: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தீபாவளியையொட்டி பயணிக்க இதுவரை 68 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x