Published : 13 Jan 2018 10:20 AM
Last Updated : 13 Jan 2018 10:20 AM
தமிழக அரசின் திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும், பெரியார் விருது பா.வளர்மதிக்கும் வரும் 16-ம் தேதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சி, தமிழ் சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 9 விருதுகளை வழங்குகிறது. இந்த விருதுக்கான தகுதியானவர்களை நேற்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது கோ.பெரியண்ணனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான பெரியார் விருது - பா.வளர்மதி, அம்பேத்கர் விருது- ஜார்ஜ். கே.ஜே., அண்ணா விருது- அ.சுப்பிரமணியன், காமராஜர் விருது- தா.ரா.தினகரன், பாரதியார் விருது- சு.பாலசுப்பிரமணியன் (எ)பாரதிபாலன், பாரதிதாசன் விருது- கே.ஜீவபாரதி, திருவிக விருது- எழுத்தாளர் வை.பாலகுமாரன், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- ப.மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை வரும் ஜன.16-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி வழங்குகிறார். விருதுபெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
விழாவில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.2,500 உதவித்தொகை மற்றும் மருத்துவப்படியாக ரூ.100 பெறுவதற்கான அரசாணையும் அளிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT