Published : 04 Jan 2018 11:50 AM
Last Updated : 04 Jan 2018 11:50 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து வேதா இல்லத்தை ஆய்வு செய்து அளவிடும் பணிகள் சமீபத்தில் நடந்தன.
இதை நினைவு இல்லமாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க தடை கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே அவரது வீட்டை நினைவு இல்லாமாக அறிவிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் இது, ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றம், இதற்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT