Published : 21 Oct 2023 05:42 AM
Last Updated : 21 Oct 2023 05:42 AM

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: சார் பதிவாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின் மதிப்புக்கு ஏற்பவும் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

கடந்த 18, 19-ம் தேதிகளில் வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப் பதிவு நடைபெற்றது. அப்போது பத்திரப் பதிவுகளுக்கான கட்டணத்தைவிட கூடுதல் பணத்தை ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் மூலம் வாங்குவதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மேலும், சார் பதிவாளர் லஞ்சப் பணத்தை தனது அலுவலகத்தில் வாங்காமல், ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களை ராமநாதபுரம் பேருந்து நிலையம் வரச்சொல்லி, அங்குவைத்து பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டறிந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பேருந்து நிலையம் சென்ற சார் பதிவாளர் பெத்துலட்சுமி இடைத்தரகர்களிடம் வசூலித்த பணத்தைப் பெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.84 லட்சத்தைக் கைப்பற்றிய போலீஸார், அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பரமக்குடி புதுநகரில் உள்ள சார் பதிவாளர் பெத்துலெட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கி வைத்திருந்த, கணக்கில் வராத ரூ.12 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து சார் பதிவாளர் பெத்துலெட்சுமியிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x