Last Updated : 17 Oct, 2023 08:12 PM

 

Published : 17 Oct 2023 08:12 PM
Last Updated : 17 Oct 2023 08:12 PM

கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும்: உயர் நீதிமன்றம்

மதுரை: கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் ஊரைச் சேர்ந்த வனிதா என்பவர் 2020-ல் அவர் கணவர் மீது போலீஸில் வரதட்சிணை புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத எங்களையும் போலீஸார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

வனிதாவின் குடும்ப விவகாரத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் முறையாக விசாரிக்காமல் எங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனுவை நீதிபதி தனபால் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''வரதட்சிணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும். ஆனால், சட்டவிரோதமாக ரத்த உறவுகள் அல்லாத மனுதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். இதையடுத்து நீதிபதி, ''வரதட்சணை புகார் அளித்த வனிதா தன் கணவரின் இரண்டாவது மனையின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார். வரதட்சிணை கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் கணவர் மற்றும் ரத்த உறவுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

பெண்ணின் கணவருக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்மீது ரூ.5 லட்சம் வரதட்சிணை கேட்டு புகார் அளித்திருப்பது சரியல்ல. புகாரை விசாரிக்காமல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x