Published : 16 Oct 2023 08:24 PM
Last Updated : 16 Oct 2023 08:24 PM

மதுரையில் நிரந்தர உதவி ஆணையாளர் இல்லாமல் தள்ளாடும் மாநகராட்சி வருவாய்த் துறை - பாதகம் என்ன?

மதுரை: கடந்த 3 ஆண்டாக நிரந்தர உதவி ஆணையாளர் இல்லாமல் பொறுப்பு அதிகாரிகளால் மாநகராட்சி வருவாய்த் துறை நிதிநெருக்கடியால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பொறுப்பு அதிகாாியும் விடுவிக்கப்பட்ட நிலையில், இனியாவது நிரந்தர உதவி ஆணையாளர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக அதிக வருவாய் கிடைக்கக் கூடிய மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. மாநகராட்சிக்கு கடைகள் வாடகை, சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளசாக் கடை வரி மற்றும் குத்தகை உள்பட பல்வேறு வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில், சொத்து வரி மட்டும் ரூ.180 முதல் ரூ.280 கோடி வருவாய் கிடைக்கிறது.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவி ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி வருவாய்த் துறை செயல்படுகிறது. மாநகராட்சியின் வருவாயை பெருக்குவது, வசூலாகாத வரி இனங்களை கண்டறிந்து அதனை வசூல் செய்வதற்கு மண்டல வருவாய்த் துறை அதிகாரிகளை முடுக்கி விடுவது, மாநகராட்சி ஆணையாளருக்கு தேவையான வருவாய் ஆவணங்களை தயார் செய்து கொடுப்பது, மாநகராட்சி மற்றும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது போன்றவை மாநகராட்சி வருவாய்த் துறை உதவி ஆணையாளரின் முதன்மை பணியாக உள்ளது.

‘கரோனா’வுக்கு பிறகு மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடத்துக்கு இதுவரை நிரந்தர அதிகாரி நியமிக்கப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளராக இருக்கக் கூடியவர்களில் ஒருவர், வருவாய்த் துறை உதவி ஆணையாளராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு வருகின்றார். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டாக மாநகராட்சி மத்திய மண்டலம் உதவி ஆணையாளராக இருந்த மனோகர், கடந்த ஒரு ஆண்டாக வருவாய்த் துறை உதவி ஆணையாளராக கூடுதல் பொறுப்பாக பார்த்து வந்தார்.

சில வாரத்துக்கு முன்பு இவர், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த மாநகராட்சி மத்திய மண்டலம் உதவி ஆணையாளர், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஆகிய பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக இரு பணியிடங்களிலும் புதிய உதவி ஆணையாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாகவே மாநகராட்சி வருவாய்த் துறையை கூடுதல் பொறுப்பாகவே உதவி ஆணையாளர்கள் பார்த்து வந்துள்ளனர். அதனால், மாநகராட்சி வருவாயை அதிகரிக்க முடியாமல் போய்விட்டது. வரி வசூல் பாதிக்கப்பட்டு மாநகராட்சி நிதி நெருக்கடியில் தவிக்கிறது. மண்டல உதவி ஆணையாளர் பணியே பணி சுமை மிக்கது. அன்றாடம் மண்டலத் தலைவரிடம் கலந்து ஆலோசிப்பது, கவுன்சிலர்கள் சந்திப்பது, வார்டுகள் ஆய்வு, மண்டல அளவில் ஆய்வுக்கூட்டங்கள், பொட்டல் வரி, வரி நிர்ணயம் செய்வது, கட்டிட அனுமதி போன்ற பல்வேறு ஆவணங்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை மண்டல உதவி ஆணையாளர் மேற்கொள்ள வேண்டிய உள்ளது.

அவர்கள் அப்பணியையும் பார்த்துவிட்டு, வருவாய்துறை பணியையும் சேர்த்துப்பார்க்க முடியவில்லை. மனோகர் மண்டல உதவி ஆணையாளராகவும், வருவாய்த் துறை உதவி ஆணையாளரையும் சேர்த்துப்பார்த்ததால் அவரால் அன்றாடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வருவாய்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு வர முடியவில்லை. அப்படியே வந்தாலும் காலையில் மத்திய உதவி ஆணையாளர் பணியைப்பார்த்துவிட்டு, மாலையில்தான் மாநகராட்சி மைய மண்டலம் வருவாய் துறை உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு வர முடிந்தது. அதனால், அவரால் முழு ஈடுபட்டோடு வருவாய்த் துறை பணியை பார்க்க முடியவில்லை.

தற்போது இடமாறுதல் கிடைத்ததால் அவர் ‘விட்டால் போதும்’ என விடுவிப்பு ஆணை பெற்று செல்கிறார். அதனால், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து ஆலோசித்து இனியாவது முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடத்திற்கு தனி உதவி ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘உதவி ஆணையாளர் பணியிடங்களில் அதிகாரிகள் வேறு மாநகராட்சி இடம் மாற்றம் செய்யும்போது அவர்களுக்கு பதிலாக மாற்று அதிகாரிகள் வழங்க வேண்டும். ஆனால், அப்படி வழங்காததால் உதவி ஆணையாளர் பற்றாக்குறையாலே இதுபோன்ற பணியிடங்களை கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x