Published : 16 Oct 2023 04:07 PM
Last Updated : 16 Oct 2023 04:07 PM

3 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அத்திக்கடவு - அவிநாசி திட்டம்?

திருப்பூர்: 65 ஆண்டுகளுக்கும் மேலாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 3 தலைமுறைகளுக்கும் மேலாக கானல்நீராக இருந்த திட்டத்துக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தபழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, 2019 டிச. 25-ம் தேதி பணியாணை வந்தது. அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன. 27 மாதங்களில் திட்டம் முடிக்கப்படும் என்றும், 2021 ஏப். 27-ம் தேதிக்குள் திட்டம் நிறைவடையும் எனவும் கணிக்கப்பட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுகவின் தேர்தல் பரப்புரையில் முக்கிய அங்கம் வகித்தது. அந்தளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட திட்டம் இது. திட்டம் தொடங்கிய பிறகு, இயற்கை வேறு மாதிரியாக சதிராடியது. உலகை உறையவைத்த கரோனா தொற்றால், அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகளும் தேங்கின. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து, விரைவில் திறக்கப்படும் என 3 மாவட்ட மக்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஆனால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ‘‘அணையில் தண்ணீர் வந்தால் தான், ஒன்றரை டிஎம்சி தண்ணீரை எடுத்து திட்டத்தை தொடங்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து, திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் பலரும்.

இதுதொடர்பாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது: 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 921 குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் என 1045 நீர் நிலைகள் பயன்பெறும் திட்டம் இது.

900-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால், தற்போது வரை 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்தும், திட்டம் நிறைவடையவில்லை.

இத்திட்டத்தில் 6 குடிநீரேற்று நிலையங்கள் உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் குடிநீரேற்று நிலையங்களுக்கு இடைப்பட்ட கூடுதுறை பவானி தொடங்கி சித்தோடு வரையிலான சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பிரதானகுழாய் பதிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நிலத்தடி நீராதாரத்துக்கான முக்கியமான திட்டம் என்பதை கடந்து, குடிநீர், விவசாயம் மற்றும்கால்நடைகளுக்கான குடிநீர் உட்பட பல்வேறு நீராதாரத் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதைதான் பிரதானமாக பார்க்கிறோம்.

பவானி ஆறு

இந்த திட்டத்தில் மேலும் 1000-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் போனால், உரிய நீர் நிர்வாகம் செய்து திட்டத்தை விரைவுபடுத்தி திறக்க வேண்டும். ஆனால் திட்டம் மேலும் தாமதாகும் என்பதுபோல் தெரிகிறது. இந்நிலையில், இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு மக்களவைத் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிடும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையம்.

மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடங்கி விடக்கூடிய சூழல்உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தை திறக்கும்போதே விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் திட்டத்தை மாநில அரசு தொடங்க வேண்டும். அதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் என அனைத்து தரப்புக்குமான முழு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x