Published : 15 Oct 2023 12:04 AM
Last Updated : 15 Oct 2023 12:04 AM

“மகளிர் இடஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது” - கனிமொழி பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’

சென்னை: "பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள்." என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கனிமொழி, "2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரில் திமுக ஆதரவாடு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவர எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், மகளிர் மசோதாவை கொண்டு வந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறது பாஜக.

பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதே பாஜக, குஜராத்தில் செய்த அட்டூழியங்களால் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை மறக்கமுடியாது. மதக் கலவரங்கள், காழ்ப்புணர்வு அரசியல், வெறுப்பு அரசியல் என அனைத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். 'தலித் என்பதால் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறேன்.' என அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடினார்கள். குடியரசுத் தலைவராக இருக்கட்டும், வீராங்கனைகளாக இருக்கட்டும், அமைச்சராக இருக்கட்டும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையைதான் பாஜக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்களே வேலைக்கு சென்றார்கள். இன்று அது எட்டு சதவீதமாக குறைந்துள்ளது. கல்வி இல்லை, எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்ற நிலையைதான் பாஜக பெண்களுக்கு உருவாக்கியுள்ளது.

பெண்கள் 50 சதவீத வாக்குகளை வைத்துள்ளார்கள். ஆனால், திட்டங்கள் எதிலும் பெண்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. நாங்கள் யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்" என்று பேசி முடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x