Published : 20 Jan 2018 09:30 AM
Last Updated : 20 Jan 2018 09:30 AM
கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து, பாளையங்கோட்டையில் ஜவஹர் திடலில் கடந்த 17-ம் தேதி மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி ஆண்டாள் பக்த சபை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன், ஆய்க்குடி குமார், திருவல்லிக்கேணி கிருஷ்ணப்ரியா ஆகிய 6 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ, 153 பி, 500, 504, 505, 506(1) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மதுரை போலீஸில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT