Published : 11 Oct 2023 05:32 AM
Last Updated : 11 Oct 2023 05:32 AM

முஸ்லிம் கைதிகள் விடுதலையில் உரிய நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீ்ர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, “கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 14 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உட்பட 36 முஸ்லிம்கள் கடந்த 20, 25 ஆண்டுகளாக உள்ளனர். தற்போது சிறையில் உள்ள 36 பேரின் மனநலம், உடல்நலக்குறைவு, குடும்பத்தினர் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

மேலும், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விசிக), சின்னதுரை (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜி.கே.மணி (பாமக), பூமிநாதன் (மதிமுக) ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோரும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன் சிறைவாசிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவற்றுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கவனஈர்ப்பு தீர்மானத்தில் 9 உறுப்பினர்கள் பேசிய கருத்துகள் அனைத்தையும் நாங்கள் முழுமனதோடு, இந்த அரசின் சார்பில் ஏற்க தயாராக உள்ளோம்.

தமிழக சிறைவாசிகளில் 10 மற்றும் 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடிந்தவர்கள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம், மனநலம் குன்றியோர், தீராத நோயுற்றவர்கள், மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் ஆகியோர் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு கடந்த 2021-ல் அமைக்கப்பட்டது.

இக்குழு தனது அறிக்கையை கடந்தாண்டு அக். 28-ம் தேதி அளித்தது. அதில் 264 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மட்டுமே முன்விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன்படி, அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு, கோப்புகள் ஆக. 24-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 20 பேர் முஸ்லிம்கள். ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.

நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். அதேபோல் கடந்த 2021 செப். 13-ம் தேதி நான் அறிவித்தபடி, அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதேபோல், அறிவுரைக்கழக திட்டத்தில் 14 பேரும், மருத்துவ காரணங்கள், நீதிமன்ற உத்தரவுப்படி 15 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும் ஏற்கெனவே முன்விடுதலை செய்யப்பட்டனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை கைதிகளின் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, கடந்த அக். 8 வரை 335 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் முஸ்லிம்கள். இந்த விஷயத்தில் சட்டரீதியான முறைப்படி தமிழக அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ரகுபதி கடிதம்: இந்நிலையில் முன்விடுதலை தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x