Published : 10 Oct 2023 11:59 PM
Last Updated : 10 Oct 2023 11:59 PM

தனியாரை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் தகவல்

மதுரை: தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு அதிக பிரசவம் நடந்துள்ளது. மொத்த 9 லட்சம் பிரசவங்களில் அரசு மருத்துவர்கள் 5.5 லட்சம் பிரசவங்களை பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமணைகளில் 3.5 லட்சம் பிரசவங்கள் மட்டுமே நடந்துள்ளது.

கடந்த காலத்தில் கிராமங்கள், நகரங்கள் வித்தியாசமில்லாமல் வீடுகளில் பிரசவம் பார்க்கும் நிகழ்வுகள் மிக சாதாரணமாக நடந்தன. அதனால், வெளிச்சத்திற்கு வராத தாய், சேய் உயிரிழப்புகளும் அதிகம் நடந்தது. அதை தடுக்க, தற்போது பெண்கள், கர்ப்பமடைந்தவுடன் அவர்களை கண்காணித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள், தடுப்பூசிகள் போட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். அதனால், வீடுகளில் பிரசவம் முழுமைமையாக தடுக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 99.8 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடப்பதாகவும், பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்கள் எண்ணிக்கையும் மிக குறைவாக உள்ளது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாநகராட்சி நகர்நல அதிகாரிக்கு அனுப்பிய புகார் கடிதம், அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த விசாரணை, மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறைக்கு எழுதிய அறிக்கை விவரம் போன்றவை பொதுவெளியில் வெளியானதால், அரசு மருத்துவமனைகளில் கர்ப்பணிகள் மகப்பேறு சிகிச்சை அஜராக்கிரதையாக நடக்கிறதா? என்ற அச்சம் நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த விவகாரத்தை கண்டித்து தற்போது தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்களுக்கு ஆதரவாக அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது.

குழந்தைகள் இயற்கையாக சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் முதல் விருப்பமாக உள்ளது. அதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைங்களில் மகப்பேறு மருத்துவர்கள் முயற்சி எடுக்கிறார்கள். அதன்பலனாக ஏராளமான சுகப்பிரசவங்களும் நடக்கின்றன. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்த 9 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளது. இதில், அரசு மருத்துவர்கள் 5.5 லட்சம் பிரசவங்களை பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பார்த்தது 3.5 லட்சம் பிரசவங்கள் மட்டுமே. ஆனால், தமிழகத்தில் அரசு மகப்பேறு மருத்துவர்கள் மொத்தம் 1000 பேர் இருக்கிறார்கள். தனியார் மகப்பேறு மருத்துவர்கள் சுமார் 10,000 பேர் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு அரசு மகப்பேறு மருத்துவரும் தங்களது எண்ணிக்கைக்கு பல மடங்கு மீறிய அளவு பிரசவம் பார்க்கின்றனர்.

ஆனால், அதற்கு பரிகாரமாக தற்போது கிடைப்பது கடினச் சொற்கள், மெமோ, 17பி சார்ஜ்கள். மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் போது அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி படைத்த, விரும்புகின்ற கர்ப்பிணிகள் செல்வதையும் தடுத்து அரசு மருத்துவர்களுக்கு பணி சுமைகளை கூட்டி கொண்டே செல்கிறது. மகப்பேறு நிதி உதவி பயன்களை பெற வேண்டுமானால் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க கட்டாய படுத்துவது ஏன்? பணப்பயன்களை பெரும் தகுதியையும் எங்கு பிரசவம் பார்ப்பது என்பதனையும் ஏன் குழப்ப வேண்டும்? கூடுதலாக அரசு மகப்பேறு நிறுத்துவது நியமிக்காமல், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தை அரசு ஊக்குவிப்பது ஏன்?. அரசு மருத்துவமனைகளில் போதுமான மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x