Published : 11 Oct 2023 05:46 AM
Last Updated : 11 Oct 2023 05:46 AM

6-வது நாளாக நீடித்த வருமானவரி துறை சோதனை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆஜராக சம்மன்

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நேற்று 6-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது ஒருபுறம் இருக்க வரும் 14-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், மகள், மருமகள், உறவினர்கள் தொடர்புடைய இடங்கள் என சுமார் 50 இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், மதுபான ஆலைகள், வீடுகள், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக சோதனை நீடித்தது. தொடர் சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுவரை சுமார் 1,050 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதற்கான முகாந்திரம் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை கிண்டி, ஈக்காட்டுதாங்கலில் ஜெகத்ரட்சகனின் மகளுக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து கட்டுக்காட்டாக பணம் மற்றும் வெளிநாட்டு பணம், பல கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுதவிர ஜெகத்ரட்சகன் வீடு, கல்வி, தொழில் நிறுவனங்களில் உள்ள கணினி, லேப்டாப்களில் தொழில்நுட்ப உதவியுடன் தடயவியல் ஆய்வையும் வருமான வரி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கணக்குகள் வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் தனிப்படை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த சோதனைகளில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், வரும் 14-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிலருக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x