Published : 08 Oct 2023 05:42 PM
Last Updated : 08 Oct 2023 05:42 PM

மதுரை | வித்தியாசமான ஹேர்ஸ்டைல், அன்னநடை: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 55 வகையான 500க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பொம்மைகள் போல காட்சியளித்த சிச்சு, பொம்மேரியன் நாய்கள் முதல், வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களுடன் அன்னநடை போட்டு வந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ரசிக்க வைத்தன.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தேசிய அளவிலான 37வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்க ஆன்லைன் முறையில் நாய்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 55 வகைகளை சார்ந்த 500க்கும் நாய்கள் கலந்துகொண்டன.

சௌசௌ, சிச்சு, தாய் பொம்மேரியன், டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன்,கிரேடேன்,ராட் மாஸ்டிஸ், பாக்சர், ஜிவாவா, மால்டிஸ், சைபீரியன் அஸ்கி, ஸ்பேனியல் உள்ளிட்ட 55 வகையான விதவிதமான வித்தியாசமான வெளிநாட்டு இன நாய்களும், ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கண்ணி,கோம்பை உள்ளிட்ட 10 வகையான நாட்டின நாய்களும் கலந்து கொண்டன.

ஜப்பான் நடுவர் குழு: கண்காட்சியில் பங்கேற்ற நாய்களில் சிறந்த நாய்களை தேர்வு செய்ய ஜப்பான் நாட்டில் இருந்து மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் குழு வந்திருந்தனர். நாய்களின் உடல் கட்டமைப்பு , கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், நாய்களின் உடல் தகுதி வயதுக்கேற்ப வளர்ச்சி நிறம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு இனங்களிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுக் கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

பார்ப்பதற்கு அச்சு அசல் பொம்மைகள் போன்று காணப்பட்ட சௌசௌ, சிச்சு, பொம்மேரியன் போன்ற நாய்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. இந்த வகை நாய்களை சிகை அலங்கார நிபுணர்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் குழந்தைகளை போல வகை வகையான ஹேர்ஸ்டைல்களில் வண்ண வண்ண கிளிப்கள் அணிந்து அழைத்து வந்திருந்தனர்.

இதில் சில வகையான நாய்கள் பார்ப்பதற்கு பூனைக்குட்டிகள் போல குழந்தைகள் கண்டு குதூகலமடையும் வகையிலும், சில நாய்கள் பார்ப்போரை மிரளும் வகையில் 4 அடிவரை வளர்ந்து பிரமாண்ட தோற்றத்துடன் காணப்பட்டு பார்வையாளர்களை வியக்கவைத்தன. போட்டியில் ஒவ்வொரு நாயும் அன்னநடை போட்டு நடந்து சென்றவிதம் பார்வையாளர்கள் ரசிக்க வைத்தன. இந்த நாய் கண்காட்சியினை மதுரை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களிலும் இருந்தும் வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x