Published : 06 Oct 2023 04:03 PM
Last Updated : 06 Oct 2023 04:03 PM

‘லியோ’ ட்ரெய்லர் காட்சியில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்: போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: லியோ' திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டின்போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கு ரசிகர்களை காவல் துறை தவறாக கையாண்டதே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்த அனுமதிக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 29-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊர்வலத்துக்கு அனுமதிக் கோரி கடந்த மாதம் 20-ம் தேதி காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவுக்கு இதுவரை காவல் துறை பதிலளிக்கவில்லை" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், "கடந்த மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காமல் இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மனுவை நிராகரித்தனர். ஒவ்வொரு முறையும் காவல்துறை இதுபோல செய்கிறது" என்று குற்றம்சாட்டினார். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பேரணிக்கு அனுமதி கோரும் பாதையில் மசூதிகள், தேவாலயம் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "அப்படி என்றால் அந்தப் பகுதியில் யாரும் நடக்கக் கூடாது என கூறுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, காவல் துறை தரப்பு வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ். மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இதுபோன்ற விவகாரங்களில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதித்து, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கலாம். 'லியோ' திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டீன்போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கு ரசிகர்களை காவல் துறை தவறாக கையாண்டதே காரணம் என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "லியோ ட்ரெய்லரை ரோகிணி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை. அனுமதி கோரியிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். திரையரங்கின் உள்ளே லியோ ட்ரெய்லர் திரையிட எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை" என்றார்.

மேலும், “ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளின்போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்தது போல, லியோ படத்தின் இசை வெளியீட்டின்போது நடந்து விடாமல் இருக்க கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், அந்த நிகழ்ச்சியை, படத் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே ரத்து செய்து விட்டது. எனவே, அதற்கும் காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும். காவல் துறையை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை" என்று விளக்கம் அளித்தார்.

அதற்கு நீதிபதி, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை பற்றி தான் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. பத்திரிகையில் செய்தி வெளியானதால் இதுகுறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x