Published : 03 Oct 2023 04:05 PM
Last Updated : 03 Oct 2023 04:05 PM

“திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகிவிட்ட கொலை” - கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை சாடல்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது" என்று கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதல்வர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். முதல்வரின் கவனம் சட்டம் - ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர் பலிகள் வேண்டும்?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் இவர் பள்ளிக்கு செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் உள்ள மேல் புளியங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். இவருடன் பல மாணவர்களும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணிய மகன் ஆனந்த் (22) வந்தார். இவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மின்சாரத் துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜீவாவிடம் சென்று தனியா பேச வேண்டும் என்று கூறி அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெலாந்துரை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனிடையே, அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஜீவாவின் விழுந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x