Published : 03 Oct 2023 03:31 PM
Last Updated : 03 Oct 2023 03:31 PM

மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் ஏராளமான பெண்கள் முற்றுகை

கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மகளிர்களுக்கு, ஆயிரம் ரூபாய் வழங்க வழங்கப்படும் என அறிவித்தது, அதன்படி கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், கும்பகோணம் வட்டத்தில் பல்வேறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினாலும் பெரும்பாலோனாருக்கு பல்வேறு காரணங்களால் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்துக்குரிய தொகை வராதவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இ-சேவை மையத்தில் கோடாட்டாசியருக்கு மேல்முறையீடு செய்யலாம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, விடுப்பட்டவர்கள் அண்மைக் காலமாக இந்த இ-சேவை மையத்தில், மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் 100-க்கும் மேற்பட்ட மேல்முறையீடு செய்பவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய வந்தவர்கள் திரண்டனர். ஆனால், அந்த இ-சேவை மையத்தில் இணையதளம் செயல்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாகத் தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் அழகேசன், நாகலட்சுமி மற்றும் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், அவர்கள் அனைவரும் இ-சேவை மையத்தில் திரண்டனர். இதனையறிந்த கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமா, வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், அங்குள்ள பெண்களிடம், பதிவு செய்து தொகை வராதவர்கள் மட்டும் மேல் முறையீடு செய்யலாம், இதேபோல் புதியதாகப் பதிவு செய்வதற்கான உத்தரவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. மேலும், இணைய தளம் செயல்படாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்ததின் பேரில் அனைவரும் அந்த இடத்திலிருந்து கலைந்துச் சென்றனர்.

இது தொடர்பாகப் பெண்கள் கூறியது: "கடந்த ஒரு வாரமாக புதியதாகப் பதிவு செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலகத்திற்கு வந்து சென்றோம். அங்குள்ள அலுவலர்கள், எங்களை செவ்வாய்க் கிழமை வாருங்கள் எனக் கூறினர். அதனால் எங்களைப் போன்ற 100-க்கும் மேற்பட்டோர் காலை 6 மணி முதல் காத்திருந்தோம். இதேபோல் பதிந்து தொகை வராதவர்களும், மேல்முறையீடு செய்ய வந்தவர்களும் குவிந்தனர்.

அதன் பிறகு 10-மணிக்கு வந்த இ-சேவை அலுவலர், இணையதளம் செயல்படவில்லை எனத் தகவல் ஒட்டியதால், உரிய பதில் கூறாமல் 4 மணி நேரம் காக்க வைத்து அலைக்கழிப்பதால், ஆத்திரமடைந்த நாங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, மாவட்ட நிர்வாகம், எங்களைப் போன்ற பெண்களை அலைக்கழிக்காமல், உரியத் தகவலை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் கூறியது: "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட புதிய பதிவிற்கான எந்த உத்தரவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. பதிந்து விட்டு, தொகை வராதவர்கள் மட்டும் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் நேற்று இங்குள்ள இ - சேவை மையத்தில் இணைய தள சேலை செயல்படாததால், இது போன்ற நிலை ஏற்பட்டது. எனவே, பெண்கள், தங்களது வீட்டின் அருகிலுள்ள இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம். அந்த இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்ய மறுத்தால், அது தொடர்பாகப் புகார் கொடுத்தால், அந்த இ-சேவை மையத்தின் உரிமம் ரத்துச் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x