Published : 03 Oct 2023 04:41 AM
Last Updated : 03 Oct 2023 04:41 AM

தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பெருமிதம்

ராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் அறக்கட்டளை சார்பில் 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னையில் தொடங்கியது. இதில், மாரியம்மாள் மகாலிங்கம் நினைவு குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பரிசு வழங்கினார். உடன் ராமலிங்கர் பணி மன்ற தலைவர் மாணிக்கம், சிற்பி பாலசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன், சிவசக்தி வடிவேல் ஆகியோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழாவில் தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

ராமலிங்கர் பணிமன்றம், ஏவிஎம்அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ராமலிங்கர் பணிமன்ற தலைவர் டாக்டர் ம.மாணிக்கம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம், திருப்பூர் கிருஷ்ணன், சிவசக்தி வடிவேல், பா.சற்குருநாத ஓதுவார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், ஓம்சக்தி இதழ் நடத்திய மாரியம்மன் மகாலிங்கம் நினைவு குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை ராமலிங்கர் பணிமன்ற தலைவர் ம.மாணிக்கம் முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கினார்.

விழாவில் நீதிபதி பேசியதாவது: வள்ளலார் சைவ நெறியை விட்டுவிட்டு தனியாக ஒரு நெறியை உருவாக்கவில்லை. சைவ நெறி குறிப்பிட்ட மனிதர்களுக்கானது அல்ல. உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது. இறைவன் யார் என்ற கேள்வியில்தான் நமக்குள் சர்ச்சை பிறக்கிறதே தவிர, இறைவன் ஒருவன் உண்டு என்பதில் யாருக்கும் சர்ச்சை கிடையாது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவரின் கொள்கையை, சிவ நெறியோடு இணைத்து வள்ளலார் பின்பற்றினார். வள்ளலாரின் கொள்கையைதான் மகாத்மா காந்தி பின்பற்றி, மக்களையும் அதனை பின்பற்ற அறிவுறுத்தினார். இவர்கள் மூன்று பேருக்கும் முக்கோண ஒற்றுமை உள்ளது.

வள்ளலார்-மகாத்மா காந்தி விழாவாக நடைபெறும் இந்த விழாவில், திருவள்ளுவருக்கும் விழா நடத்த வேண்டும். தமிழ் என்பது இறை மொழி. சைவ திருமுறைகள், திருவருட்பா, ராமாயணம், திவ்ய பிரபந்தம், கந்த புராணம், சிவ புராணம் உள்பட சுமார் 52 ஆயிரம் பாடல்கள் இறை இலக்கியம் என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.

தமிழைவிட ஒரு சிறந்த இறைமொழி இந்த உலகில் இல்லை. அப்படிப்பட்ட தமிழ் மொழியை, இறைமொழியை பாதுகாக்க வள்ளலாரின் திருவருட்பா பயன்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

2-வது நாளாக நேற்று நடைபெற்ற விழாவில், ‘மகாத்மா காந்தி திருநாள் - நூற்றாண்டு நாயகர் அருட்செல்வர்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள், மரபின் மைந்தன்முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாலையில், ‘அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது’ வழங்கும் விழாவும், ‘ஹரிஜன்’ தொகுப்பு நூல்வெளியிடும் நிகழ்வும் நடந்தது. இதைத்தொடர்ந்து, அக்.3-ம் தேதி அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல் வெளியீடு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமைஉரையாற்றுகிறார். 4-ம் தேதி வரமாய்த் தமிழுக்கு வாய்த்த சான்றோர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் பங்கேற்று பேசுகிறார். நிறைவு நாளானஅக்.5-ம் தேதி திருஅருட்பா செம்பதிப்பு நூல் வெளியீடு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் விஐடி நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை உரையாற்றுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x