Published : 03 Oct 2023 04:31 AM
Last Updated : 03 Oct 2023 04:31 AM

காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 42,978 பேருக்குபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 1,434 பேருக்கு காய்ச்சலும், 1,340 பேருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. பாதிப்பு சற்றுஅதிகமாக இருந்ததால் 18 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், வீடு, வீடாக சென்று கண்காணிக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஒரு கிராமத்தில் மூன்றுபேருக்கு மேல் காய்ச்சல்இருந்தால் அங்கு, மருத்துவமுகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று காய்ச்சலை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள்விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x