Published : 03 Oct 2023 05:44 AM
Last Updated : 03 Oct 2023 05:44 AM

மகாத்மா காந்தி 155-வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா, ‘காந்தி ஜெயந்தி’ விழாவாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் காந்தியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அமைச்சர்கள், துரை முருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, கிரிராஜன் எம்.பி., தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, செய்தி துறை செயலாளர் இரா.செல்வராஜ், இயக்குநர் த.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களின் கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் காந்தியின் படத்துக்கு கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி தலைமையகமான பாலன் இல்லத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுகரசர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தெற்கு ரயில்வே சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மை பிரசாரம் விழா சென்னை சென்ட்ரலில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மேலும் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர், மற்றும் தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி. வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர். அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டுக்கே ‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார். அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது லட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லார்க்கும் எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்.

இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மகாத்மா காந்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x