Published : 26 Dec 2017 10:10 AM
Last Updated : 26 Dec 2017 10:10 AM

பொங்கலுக்கு முன் சட்டப்பேரவை கூட்டம்?

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசகர் ராவ் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற்றது. கனமழை, புயல், இடைத்தேர்தல் என நவம்பர், டிசம்பர் மாதங்கள் பரபரப்புடன் காணப்பட்டதால், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக அரசிடம் இருந்து ஆளுநர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஜனவரி முதல் வாரத்தில் அல்லது பொங்கலுக்கு முன்பு தொடங்க வாய்ப்புள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் எம்எல்ஏவாக பேரவைக்குள் நுழைய இருப்பதால், இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x