Published : 02 Oct 2023 05:41 AM
Last Updated : 02 Oct 2023 05:41 AM

சென்னை உட்பட 29 இடங்களில் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்

கோப்புப்படம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 29 இடங்களில் அடுத்த பயணத்துக்காக வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது.

ஜப்பானில் ‘7 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் புல்லட் ரயில்களை சுத்தப்படுத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, கடைசி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு,வெறும் 7 நிமிடங்கள் சுத்தப்படுத்தப்படும். அதன்பின், அடுத்த பயணத்துக்கு அந்த ரயில் தயாராகிவிடும்.

அதே போன்ற ஒரு திட்டத்தை ரயில்வே துறை நாட்டில் நேற்று அறிமுகப்படுத்தியது. இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ரயில்களை சுத்தப்படுத்தும் பணி, ‘14 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் நடத்தப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று டெல்லி, சென்னை, புரி, ஷீரடி உட்பட நாடு முழுவதும்29 ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. டெல்லி கன்னாட் ரயில் நிலையத்தில் வந்தே பாரத்ரயிலை 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் பணியை ரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாக வந்தே பாரத் ரயில்களை சுத்தப்படுத்த 45 நிமிடங்கள்ஆகும். தற்போது 14 நிமிடங்களில்சுத்தப்படுத்தும் பணி அறிமுகமாகி இருக்கிறது. பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி விட்டதை உறுதி செய்த பின்னர், சுத்தப்படுத்தும் பணி உடனடியாக தொடங்கும். அதற்காக ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலுக்கும் பிரத்யேகஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்களை சுத்தப்படுத்தும்பணியை எப்படி செய்ய வேண்டும்என்று வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரயிலின் உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்தும் பணிகளை செய்வார்கள்.

இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெறும். ஒரு மாதத்துக்கு பிறகு இந்த பணிகள் குறித்து கருத்துகள் பெறப்பட்டு அதற்கேற்ப திட்டம் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x