Last Updated : 02 Oct, 2023 05:40 AM

 

Published : 02 Oct 2023 05:40 AM
Last Updated : 02 Oct 2023 05:40 AM

அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்: தமிழக அரசு நிரந்தர தீர்வு காணுமா?

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் | படம்:எஸ். சத்தியசீலன்

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபகாலமாக தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன. அந்தவகையில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகமே தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது.

ஒருபுறம் சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை சேர்ந்த 3 சங்கங்களும், பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

மேலும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம், புதிய ஒய்வூதியத் திட்ட (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் போராட்டத்தை நடத்தின.

இதுதவிர தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட பல சங்கங்களும் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பள்ளிக்கல்வித் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (அக்டோபர் 3), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆசிரியர் இயக்கங்களின் இந்த போராட்டங்கள் தொடரும்பட்சத்தில் அது மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டுமென கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் இந்த போராட்டங்களுக்கு மையமாக இருப்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான். ஏனெனில், ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் 85 சதவீதத்துக்கும் மேலானவை தேர்தல் வாக்குறுதிகள் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரவு தெரிவித்த அம்சங்களாக உள்ளன. இதனால் சாத்தியமற்ற கோரிக்கைகளைகூட ஆசிரியர் சங்கங்கள் முன்வைக்கும்போது கூட மறுக்க முடியாத நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மறுபுறம் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார். சில போராட்டங்களுக்கு நேரில் வந்துகூட திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தார். ஆனால், இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் திமுக சொன்ன பிரதான வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் என்ற வார்த்தையை முதல்வர் மறந்தும்கூட சொல்வதில்லை.

இதுசார்ந்து பல போராட்டங்களை நடத்தியபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை ஒரு அறிவிப்புகூட அமலுக்கு வரவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம். ஜாக்டோ- ஜியோவில் இருக்கும் சிலர் அரசுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அதனாலேயே ஆசிரியர் அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை அறிவிக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள் தாக்கப்பட்டால் கல்வி அமைச்சரிடம் இருந்து அறிக்கைகூட வருவதில்லை. இத்தகைய மனஅழுத்தமே எங்களை போராட்டத்தை நோக்கி நிர்பந்திக்கிறது’’என்றார்.

இதேபோல் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என்ற சூழலில் ஊதியம் மட்டும் வெவ்வேறு என்பதை ஏற்க முடியாது. ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தனிக்குழு அமைத்து சரிசெய்வதாக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதியான வாக்குறுதி வழங்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கங்களுடன் பேசி வருகிறோம். விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்’’என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x