Last Updated : 22 Sep, 2023 10:34 PM

 

Published : 22 Sep 2023 10:34 PM
Last Updated : 22 Sep 2023 10:34 PM

“உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைப்பர்” - ஐகோர்ட்

மதுரை: “நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைக்க தொடங்குவார்கள்” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி, கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தோம். முதலில் பகுதி நேர பணியாளர்களாகவும் பின்னர் முழு நேர பணியாளர்களாகவும் பணிபுரிந்தோம். 2018-ல் முழு நேர பணியாளர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதனால் எங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் எங்களது பகுதி நேர பணிக் காலத்தையும் கணக்கிட்டு எங்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எங்களது பகுதி நேர பணிக்காலத்தையும் கணக்கிட்டு பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் வழங்க 2019-ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றம் 2019-ல் பிறப்பித்த உத்தரவு 4 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருந்தால் மக்கள் நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை, நீதிமன்றம் தேவையில்லை என நினைக்க தொடங்குவார்கள்.

இது நாட்டுக்கு சரியானது அல்ல. பொறுப்பற்ற அதிகாரிகளை நீதிமன்றம் காப்பாற்ற முடியாது. பாதிக்கப்பட்ட மக்களும், நியாயமானவர்களும் நீதிமன்றம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு திருப்தியாக இல்லை. தவறு செய்த அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x