Published : 07 Dec 2017 11:13 AM
Last Updated : 07 Dec 2017 11:13 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி இன்று ஆஜர்: தீபாவின் கணவர் மாதவன் நேரில் விளக்கம் அளித்தார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், அவரிடம் கைரேகை வாங்கிய டாக்டர் பாலாஜி இன்று ஆஜராகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளது. ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படும் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர். ஜெ. தீபாவின் கணவர் மாதவன், விசாரணை ஆணையத்திடம் 18 கேள்விகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை கடந்த மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு மாதவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலையில் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு மாதவன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு மருத்துவர் டிட்டோவும் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெ.தீபா, வரும் 13-ம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையத்தில் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை யில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்தது. “மருத்துவமனையில் இருந்தபோது, எனது முன்னிலையில்தான் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது” என்று அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இதன் அடிப்படையில் பாலாஜியிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறு முகசாமி தலைமையிலான ஆணையம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x