Published : 13 Sep 2023 05:14 AM
Last Updated : 13 Sep 2023 05:14 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், டிஎன்பிஎஸ்சி தலைவராக, ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. அதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆளுநர் கோப்புகளை திருப்பி அனுப்பினார். அதேபோல, சென்னை பல்கலைக்கழகம், அரசு கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை நியமிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. யுஜிசி பிரதிநிதியை நியமிக்க அவசியம் இல்லை என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்த நிலையில், யுஜிசி பிரதிநிதியுடன் தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்தார். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்முடி தெரிவித்திருந்தார்.

இதுதவிர, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய விவகாரத்தில், உதயநிதி மீதும், அமைச்சர் சேகர்பாபு மீதும் நடவடிக்கை கோரி பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர். ஆளுநர் வரும் 15-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இது ஆளுநரின் தனிப்பட்ட பயணம் என்று கூறப்பட்டாலும், தமிழக நிகழ்வுகள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து, அவர் பேச உள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி விவகாரம், சனாதனம் தொடர்பான புகார்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும்கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x