Published : 09 Sep 2023 04:13 PM
Last Updated : 09 Sep 2023 04:13 PM

போதை ஒழிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: போதை மருந்து புழக்கத்தையும் அதனால் ஏற்படும் சட்டவிரோத பண புழக்கத்தையும் அதன் மூலம் செயல்படுத்தபடும் பயங்கரவாதத்தையும் முற்றிலும் முறியடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,, "கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் நிலை இருக்கிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பகுதி எனும் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் கூட மிக அதிகமாக போதைப் பொருட்கள் புழக்கம் என்பது எச்சரிக்கை நிலையைக் கடந்து அபாய நிலையில் இருக்கிறது என்பதற்கு உதாரணம். அதுவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் போதையில் ஆசிரியர்களை தாக்குவதும் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொள்வதும் என பொது இடங்களில் எல்லை மீறுவது போன்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

போதைக்கு எதிரான சபதம் ஏற்பு கண்துடைப்பு நாடகமாக சமீபத்தில் நடந்து முடிந்தது. வெறுமனே சபதமேற்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது உறுதியான நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்பும்தான் மாற்றத்தை தரும் அந்த வகையில் இப்போதைய தேவை அரசின் கடும் கண்காணிப்பும் நடவடிக்கையும்தான் ஆனால் அரசின் நிர்வாகத் தோல்வியை தினசரி செய்திகளில் போதையால் நடக்கும் கொலை, தற்கொலை செய்திகளுமே உறுதி செய்கின்றன. கஞ்சா, அபின், கொகைன், போதை மாத்திரைகள் போன்றவற்றை மட்டுமே தடுக்க வேண்டும் என்பதாக தமிழக அரசு நினைத்து கொள்கிறது போலும்! டாஸ்மாக் மதுபானம் சத்து டானிக் என்று ஆளும் திமுக அரசு கருதுகிறதா?

தமிழ்நாட்டில் போதை பெருகியதற்கு அடிப்படை காரணம் டாஸ்மாக் மதுபான விற்பனை தான். அதிலும் இந்த திமுக அரசு பதவியேற்றதிலிருந்து டாஸ்மாக் மதுபானத்தை சீரும் சிறப்புமாக சந்தைபடுத்தி குடிகாரர்களை வளைக்க விதவிதமாக திட்டம் போட்டு அமைச்சரே பேசுகிறார். திமுக அரசு அத்தியாவசிய தேவையான மின்சாரம், பால் போன்றவற்றின் விலையை ஏற்றியது மட்டுமல்லமல், டாஸ்மாக் மது விலையையும் அதிகரித்துவிட்டது எனவே மது போதையைவிட அதிக போதையை போதை ஆசாமிகள் தேடுவதால் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாகிறது.

ஒருபுறம் போதையால் இளைஞர்கள் ,ஏழைகள், சீரழிகிறார்கள் என்பதுடன், இன்னொருபுறம் போதை பொருள் சந்தையால் உருவாகும் சட்டவிரோத பண புழக்கத்தால் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் பலனடைகிறார்கள். அந்த வகையில் சர்வதேச நிலவரங்களை பார்க்கையில் இங்கேயும் பின்புலத்தில் இடதுசாரி நக்சல் பயங்கரவாத குழுக்களும், இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை . போதைப் பொருட்களும் பயங்கரவாதமும் கைகோர்த்து தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை தமிழக அரசும் தமிழக உளவுத்துறையும் எப்போது உணர்ந்திடும்..

எப்போதும் இல்லாத அளவு இந்திய கடற்கரை துறைமுகங்கள், கடற்கரை பகுதிகளில், விமான பயணிகளிடமும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் நேற்றைக்கு இதுவரை கேள்விபடாத புது வகை போதை பொருள் ஐஸ் போதை பவுடர் ராமேஸ்வரம் வேதாளை அருகே பிடிபட்டுள்ளது. போதை மருந்து புழக்கம் நமது மாநிலத்தின் உற்பத்தி திறனை முடக்கும் மக்களின் உடல் நலனை சீரழிக்கும் அதே சமயம் போதைக்கு அடிமையானவர்கள் மூலமாக பயங்கரவாத செயல்களை செய்யச் சொல்லும் அபாயமும் உள்ளது. போதை மருந்து வியாபாரம் மூலம் உருவாகும் நிதி பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தபடும் அபாயமும் உள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள், உளவுத்துறை, காவல்துறை இணைந்து நமது இந்திய மண்ணில் போதை பொருட்கள் உள்ளே வராதபடி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். போதை மருந்து புழக்கத்தையும் அதனால் ஏற்படும் சட்டவிரோத பண புழக்கத்தையும் அதன் மூலம் செயல்படுத்தபடும் பயங்கரவாதத்தையும் முற்றிலும் முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x