Published : 03 Sep 2023 09:02 AM
Last Updated : 03 Sep 2023 09:02 AM

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தர்மன் சண்முக ரத்னம்

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முக ரத்னத்துக்கு எனது வாழ்த்துகள். அவரது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் நம்மை பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.

அவரது பதவிக்காலம் வெற்றி கரமானதாக அமைந்திட விழைகிறேன். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெருமை மிக்க சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முக ரத்னத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது தலைமையில் சிங்கப்பூர் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: "சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளை பெற்று, அபார வெற்றி பெற்றுள்ள தமிழரும், இந்திய வம்சாவளியுமான தர்மன் சண்முகரத்னத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அவரது பணி சிறக்க நல்வாழ்த்துகள்."

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: "யாழ்ப் பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அரங்கில் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும். அவரது தலைமையில் சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்குமான நெருக்கமான உறவு மேன்மைப் படுத்தப்படும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது."

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: "உலக அரங்கில் ஒருசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் அரசுக்கு, ஒரு தமிழர்மீண்டும் அதிபராக வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு எனது வாழ்த்துகள்."

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: "பல்வேறு நாடுகளின் வர்த்தக மையமாக திகழும் சிங்கப்பூர், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாகமுன்னேறி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: "சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னத்துக்கு வாழ்த்துகள். அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்திய வம்சாவளியினர் நாட்டின் மிகப்பெரும் பதவிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான தருணமாகும்."

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்த தர்மன் சண்முக ரத்தினம், தற்போது மதிப்பு மிக்க சிங்கப்பூரின் அதிபர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது."

வி.கே.சசிகலா: "சிங்கப்பூர் நாட்டின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன்சண்முகரத்னம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்." இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x