Published : 01 Sep 2023 06:00 AM
Last Updated : 01 Sep 2023 06:00 AM

விநாயகர் சதுர்த்திக்கு செப். 18 அரசு விடுமுறை: தலைமைச் செயலர் அறிவிப்பு

சென்னை: செப். 17-ம் தேதி ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று செப். 18-ம் தேதியை (திங்கள்கிழமை) அரசு விடுமுறை நாளாக தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கடந்தாண்டு இறுதியில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டது. அதில், செப். 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம், சதுர்த்தி திதியானது செப். 18-ம் தேதி வருவதாக குறிப்பிட்டு, பல்வேறு தரப்பினரும் அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அரசு விடுமுறை தினத்தை செப். 18-க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப். 18-ம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு அக். 11-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், செலாவணி முறிச்சட்டத்தின்படி, இந்தாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளானது செப். 17-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்துசமய அறநிலைய துறை ஆணையர் கடந்த ஆக. 19-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், பல்வேறு கோயில் குருமார்களின் அறிவிப்பின்படி விநாயகர் சதுர்த்தி செப். 17-ம்தேதிக்கு பதில் செப். 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதனை ஆய்வு செய்த தமிழக அரசு, செலாவணி முறிச்சட்டப்படி, விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையானது செப். 17-ம் தேதிக்கு பதில் செப். 18-ம் தேதியாக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு செப். 1-ம் தேதி அரசிதழ் அறிவிக்கையாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x