Published : 05 Dec 2017 08:28 PM
Last Updated : 05 Dec 2017 08:28 PM
வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த வயதான பெண்மணியிடம் சாலையில் நின்றிருந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நான் எதாவது உதவட்டுமா? என்று கேட்க, கேட்பவர் சென்னை காவல் ஆணையர் என்பதை அறியாமலேயே பேசிவிட்டு கைகொடுத்துவிட்டு சென்றார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முதல்வர், அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்ட அமைதி பேரணி வாலாஜா சாலையில் சென்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது நெரிசலில் சிக்கிய வயதான பெண்மணி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்துக்கொண்டிருந்தார். இதை கவனித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அந்த பெண்மணிக்கு கைகொடுத்து உதவினார். பின்னர் நான் உங்களுக்கு எதாவது உதவி செய்யவா? என்று கேட்டார்.
கடுமையான வெயிலில் நடந்து வரும் தன்னை காவல் அதிகாரி ஒருவர் விசாரிக்கிறாரே என்று நிமிர்ந்து பார்த்த அந்த வயதான பெண், தன்னுடன் பேசுவது காவல் ஆணையர் என்பதை அறியாமல் “உங்கள் கேள்விக்கு நன்றி ஐயா, என்னை இந்த சாலையை கடக்க உதவி செய்தால் போதும் நான் போய் விடுவேன்” என்று தெரிவித்தார்.
அவருக்கு உதவ போலீஸாரை அழைத்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல் ஆணையர் கைகளை பிடித்து ரொம்ப நன்றி என்று கூறிவிட்டு அந்த பெண்மணி சென்றார். இந்தக்காட்சியை அங்கு நின்றுக்கொண்டிருந்த போலீஸார் வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT