Published : 28 Aug 2023 06:10 AM
Last Updated : 28 Aug 2023 06:10 AM

புதிய வாகனங்களை பதிவு பணிகளுக்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல அவசியமில்லை: உரிய அறிவுறுத்தல் வழங்க ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் எடுத்துச் செல்ல அவசியம் இல்லை என்று அதிகாரிகள், விற்பனையாளர்களுக்கு அரசு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 91 வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். இதனால், வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக, இதர செலவுஎன்று குறிப்பிட்ட தொகையை வாகனம் வாங்குவோரிடம் விற்பனையாளர்கள் வசூலிக்கின்றனர்.

ஆனால், மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கப்படும் புதிய வாகனங்களை, பதிவு அலுவலரிடம் காண்பிக்க அவசியம் இல்லை. தவிர,ஆர்டிஓ அலுவலகம் தொடர்பான பெரும்பாலான பணிகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதிய வாகனங்கள் பதிவுக்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை கடந்த மாதம் அமலாகியுள்ளது. இதுகுறித்து அலுவலர்கள், வாகன விற்பனையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது: அங்கீகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட புதிய வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்த அவசியம் இல்லை. வாகனம் தொடர்பான கோப்புகள் மட்டும் அலுவலர்களின் பார்வைக்கு சென்றால் போதும். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

ஒருசில மாநிலங்களில் வாகனவிற்பனையாளர்களே பதிவெண் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையும் உள்ளது. ஆனால்,தமிழகத்தில் இன்னும் வாகனங்களை ஆய்வுக்காக நேரில் கொண்டு செல்லும் நடைமுறையையே பின்பற்றுகின்றனர்.

ஆர்டிஓ அலுவலக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, மக்களிடம் கூடுதல் தொகையும் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஆர்டிஓ அலுவலக சேவைகள் கணினிமயம் ஆக்கப்பட்டாலும், அதன் பயன் மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து ஆணையர் மூலம்விரிவான வழிகாட்டுதலை உள்துறை செயலர் வழங்க வேண்டும்.இதனால், லஞ்சம் தவிர்க்கப் படுவதோடு, பொதுமக்களும் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x