Last Updated : 22 Aug, 2023 03:44 PM

 

Published : 22 Aug 2023 03:44 PM
Last Updated : 22 Aug 2023 03:44 PM

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 12 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் 12 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, அசோக்மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள், வீரசக்தி, செல்வகுமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘நாங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். இதனால் கம்பெனி சட்டப்படியே நடவடிக்கை எடுக்க முடியும். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இதுவரை 126 பேரின் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். நியோ மேக்ஸ் நிறுவனம் நிதி நிறுவனம் போல் செயல்பட்டுள்ளது. கம்பெனி சட்டப்படி நிறுவனம் நடத்தினால் முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பங்கு கொடுக்காமல் பத்திரம் மட்டுமே வழங்கியுள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிதி நிறுவனம் சார்பில் முதலீடு செய்த பணத்துக்கு பதிலாக நிதி நிறுவனம் சார்பில் இடமாக வழங்கப்படுவதாக தெரிவிப்பதை ஏற்க முடியாது. நிறுவனம் தர முன்வரும் நிலத்தை விட அதிகளவில் பணம் முதலீடு செய்துள்ளோம். இதனால் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றனர். பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி இளங்கோவன் இன்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x