Published : 27 Dec 2017 11:08 AM
Last Updated : 27 Dec 2017 11:08 AM

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வி குறித்து ஆராய காங்கிரஸில் 5 பேர் குழு: 4 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவு

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளரின் தோல்வி குறித்தும், காங்கிரஸின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆர்.தாமோதரன் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார். இது திமுக மட்டுமின்றி காங்கிரசையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திமுகவில் மூவர் குழு

ஏற்கெனவே, ஆர்.கே.நகரில் திமுக நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி, திமுக சட்டப்பிரிவு செயலாளர் இரா. கிரிராஜன், சட்டப்பிரிவு துணைச் செயலாளர் வீ.கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கை நாராயணன்

இந்நிலையில், திமுக வேட்பாளரின் தோல்விக்கான காரணங்களை கண்டறியவும், காங்கிரஸ் நிர்வாகிகளின் தேர்தல் பங்களிப்பு குறித்து ஆராயவும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆர்.தாமோதரன் தலைமையில் 5 பேர் குழு நேற்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் கீழானூர் ராஜேந்திரன், சி.டி.மெய்யப்பன், செய்தித் தொடர்பாளர்கள் எஸ்.எம்.இதாயத்துல்லா மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு தனது விரிவான அறிக்கையை 4 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x