Published : 28 Dec 2017 09:22 AM
Last Updated : 28 Dec 2017 09:22 AM

பிப்ரவரியில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா: யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அறிவிப்பு

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் வரும் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறும் என்று யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் கூறியுள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது கச்சத்தீவு.

இயற்கைச் சீற்றங்களில் இருந்து காப்பாற்றுமாறும், தங்களுக்கு அதிக அளவில் மீன் கிடைக்கச் செய்யுமாறும் வழிபாடு நடத்திய பின்னரே மீனவர்கள் கடலுக்குச் செல்வது வழக்கம். அதன்படி, ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது.

இலங்கை அரசு இந்த தேவாலயத்தை 2016-ல் புதிதாக அமைத்தது. இந்நிலையில், மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கடந்த மார்ச்சில் நடைபெற்ற புனித அந்தோணியார் திருவிழாவை தமிழகத்தைச் சேர்ந்தோர் புறக்கணித்தனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வரும் பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் என்று, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார். அவர், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விழாவுக்கான அழைப்பிதழ் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x