Published : 06 Dec 2017 07:06 PM
Last Updated : 06 Dec 2017 07:06 PM

ஆர்.கே.நகரில் மேலும் 5 ஆயிரம் போலி வாக்காளர்கள்: வழக்கு விரைவில் விசாரணை

 ஆர்.கே நகரில் ஏற்கெனவே போலி வாக்காளர்கள் 45 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில் மேலும் 5 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தத் தடை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும், நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதியில் மேலும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை, அவர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம் சுந்தர் அமர்வில் முறையீட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி வழக்காக தாக்கல் செய்ய அனுமதி அளித்ததுடன், நாளை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடப்படும் என தெரிவித்தனர்.

இதனால் போலி வாக்காளர்கள் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x