Published : 18 Aug 2023 05:07 AM
Last Updated : 18 Aug 2023 05:07 AM

இமயமலையில் இருந்து திரும்பினார் ரஜினி - உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை சந்திக்க திட்டம்

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்துக்கு நண்பர்களுடன் சென்ற ரஜினிகாந்தை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். (அடுத்த படம்) அங்குள்ள பரமஹம்ச யோகானந்தர் மடத்தின் மூத்த துறவியை சந்தித்து பேசினார்.

சென்னை: இமயமலை பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் நண்பர்களுடன் தியானம் செய்தார். பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்திக்க உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, கடந்த 9-ம் தேதி தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

ஓய்வு கிடைக்கும்போது இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டவர் ரஜினி. கரோனா பரவல் காரணமாக இமயமலை பயணம் மேற்கொள்ளாமல் இருந்த அவர், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்றுள்ளார்.

இப்பயணத்தின்போது, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். முதலில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தராகண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார். இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்குசென்றார். கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்புக்காக போலீஸாரும் உடன் சென்றனர்.

இமயமலை பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்வது வழக்கம். இந்த முறையும் குகைக்குள் அவரும், அவரது நண்பர்களும் தியானத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருடன் சந்திப்பு: இந்நிலையில், இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார். அந்த ஆசிரமத்துக்கு நன்கொடையும் வழங்கியுள்ளார். அங்கு காலை உணவை முடித்துக்கொண்டு, ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இன்று லக்னோ செல்லும் ரஜினிகாந்த், அங்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேச உள்ளார் என்று கூறப்படுகிறது.

‘ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் ரஜினி மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இப்படத்தின் வசூல் சாதனை அவரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதைகொண்டாடும் ரஜினி, அடுத்து ஞானவேல் இயக்கும் படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x