Published : 20 Nov 2017 10:27 AM
Last Updated : 20 Nov 2017 10:27 AM
பள்ளிக் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் பாடத்திட்ட மாற்றம் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
பள்ளிக் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் பாடத்திட்ட மாற்றம் இன்று (20-ம் தேதி) இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் பிறகு கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு, தேவைப்பட்டால், மாற்றங்கள் செய்யப்படும். மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தில் நல்ல கல்வியை தேர்ந்து எடுக்க உதவி செய்யும் வகையில், கல்வி உதவி மையம் கொண்டு வரப்படும்.
மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதாக சந்திக்கும் வகையில், முதல் கட்டமாக 25 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 100 மையங்கள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். மீதம் உள்ள மையங்கள், ஜனவரி மாதம் தொடங்கப்படும். ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான பயிற்சியை, பில்கேட்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
ரூ.500 கோடியில் கழிப்பறைகள்
அரசுப் பள்ளிகளில் ரூ.500 கோடி செலவில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுப்பதற்கான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் டிசம்பர் மாதம் அறிக்கை பெற்று, தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், பணி வாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும் முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT