Published : 04 Nov 2017 07:50 PM
Last Updated : 04 Nov 2017 07:50 PM

கெங்கு ரெட்டி பாலம் திறப்பு; அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் மூழ்கும்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

நான்கு நாட்கள் மூடிக்கிடந்த கெங்குரெட்டி பாலத்தில் தேங்கிய மழை வெள்ள நீரை அகற்றிய பிறகு இன்று போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. தண்ணீர் தேங்கும் பிரச்சனையை சரிசெய்யாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் மீண்டும் மழையில் பாலம் மூழ்கும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மழையும், சிலநேரம் கனமழையும் பெய்தது. இதனால் சாலையெங்கும் மழைவெள்ள நீர் ஆறாக ஓடி போக்குவரத்து முடங்கியது. சென்னையில் உள்ள 19 சுரங்கப் பாலங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டு போக்குவரத்து முடங்கியது. இதில் 17 சுரங்கப் பாலங்கள் உடனடியாக நீரகற்றப்பட்டு செயல்பட துவங்கியது. கெங்குரெட்டி சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாலம் நீரகற்றப்படாமல் இருந்தது. இன்று அது சீர் செய்யப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டது.

கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையின் அடிப்படை பிரச்சினையை பற்றி அறியாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால்தான் ஒவ்வொரு முறையும் மழை நீர் தேங்குகிறது அதை அகற்றமுடியாமல் போகிறது என வாகன ஓட்டிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கெங்குரெட்டி பாலத்தை ஒட்டிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் கூறும்போது, ''சாதாரணமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயம் இது. மழை பெய்யும் போது பாலத்தின் மேலுள்ள காவலர் குடியிருப்பில் தேங்கும் மழை நீர் நேரடியாக சுரங்கப் பாலத்திற்குள் வருகிறது. அதை சரிசெய்து வேறு வழியில் அந்த மழை நீரை திருப்பி விட வேண்டும் அப்போது தான் இந்த பாலத்தில் நீர் தேங்குவது நிற்கும்.

பாலத்தின் பக்கச் சுவற்றில் மேலே இருந்து வரும் மழை நீர் செல்ல பெரிய குழாய் போட்டு அது பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழாய் உடைந்து மாசக் கணக்காகுது. அதனால் நேரடியாக இன்றும் பாலத்தில் தண்ணீர் ஊற்றுகிறது.

அதை சரிசெய்யாமல் மாநகராட்சி ஆணையர் பேட்டி அளிக்கிறார், சாதாரண எங்களுக்கு தெரியும் விஷயம் இவர்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது'' என்ற ஆறுமுகம் அந்த பைப் உடைந்து தண்ணீர் செல்வதை காண்பித்தார்.

கண்ணெதிரில் இருக்கும் குறைகளை சரி செய்யாமல் பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x