Published : 10 Nov 2017 10:03 AM
Last Updated : 10 Nov 2017 10:03 AM
டெல்லியில் நவ.20, 21, 22 ஆகிய 3 நாட்கள் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த உள்ள நிகழ்ச்சிகளில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருச்சியில் நேற்று அந்தக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் கிறிஸ்டினாசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாடு முழுவதிலும் உள்ள 170-க்கும் அதிகமான விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த 51 விவசாய சங்கங்களும், அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
எப்போதும் இல்லாத வகையில், விவசாயிகளின் கூட்டு முயற்சியும், ஒற்றுமையும் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்கொலைக்கு இனிமேல் இடமில்லை என்ற உணர்வுடன் விவசாயிகள் ஒன்று திரண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும், 52 சதவீதம் விவசாய குடும்பங்களும், தமிழகத்தில், 82.5 சதவீதம் விவசாய குடும்பங்களும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் மொத்தக் கடனில், 36 சதவீதம் தனியார் நிதி நிறுவனங்களிலும், கந்து வட்டிக்காரர்களிடமும் பெறப்பட்டுள்ளது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எனவே, “ கடன் தள்ளுபடி மட்டுமல்ல, கடனில் இருந்து நிரந்தர விடுதலை வேண்டும். விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் கூடுதல் விலை என்ற தேசிய விவசாயிகள் கமிஷன் பரிந்துரையை சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டத்திலும், தொடர்ந்து, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் விவசாயிகள் நாடாளுமன்றத்திலும் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT