Published : 09 Nov 2017 02:34 PM
Last Updated : 09 Nov 2017 02:34 PM

திருமண விழா என்று சொல்லி 200 கார்கள் முன்பதிவு: ரெய்டு தகவல் கசியாமல் இருக்க வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு

சென்னை முழுதும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் அதிகாரிகள் சோதனைக்குச் செல்ல வாடகைக் கார்களை அமர்த்தும்போது சாமர்த்தியமாக திருமணத்துக்கு தேவை என்று பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுதும், டெல்லி, ஹைதராபாத், புதுவை, பெங்களூரு உட்பட 10 நிறுவனங்களைச் சார்ந்த 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனையை ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.

வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு:

சோதனை பற்றிய விவரங்கள் யாருக்கும் கசிந்துவிடக்கூடாது என்பது குறித்து கவனமாக இருந்தததால், ஒவ்வொரு அடியையும் ரகசியமாக எடுத்து வைத்துள்ளனர். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில்தான் கார்களை வாடகைக்கு எடுப்பார்கள், வருமான வரித்துறையினர்.

திருமணத்துக்காக 200 கார்கள்:

ஆனால் இந்த முறை பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் 200 கார்களை சோதனைக்காகப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 200 கார்களை வாடகைக்கு எடுக்கும்போது தகவல் கசிந்து அதன் மூலம் சோதனை விவரம் தெரிந்துவிடும் என்பதால் பெரிய செல்வந்தர் வீட்டுத் திருமணத்திற்கு கார் வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே வாடகைக்கு முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

கண்ணாடியில் ஒட்டிய திருமண அட்டை:

இன்று காலை கார்களை வாடகைக்கு எடுக்கும் போது, அனைத்து கார் ஓட்டுநர்களிடமும் கார் கண்ணாடியில் ஒட்டும்படி அட்டை ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் ஸ்ரீனி வெட்ஸ் மஹி (SRINI-weds-MAHI) என்ற வாசகங்கள் இருந்துள்ளன. மணமகன் வீட்டாருக்கு கார் வாடகைக்கு எடுப்பது போல் எடுத்து அதில் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கார் ஓட்டுநர்கள் ஏமாந்தனர்:

கார் ஓட்டுநர்களிடம் இது பற்றி கேட்டபோது "எங்களுக்கு திருமணவிழாவுக்கு கார் தேவை என்று தான் சொன்னார்கள். கல்யாணவீட்டு சவாரி என்று வந்தோம். காரில் வந்தவர்களும் விலாசத்தை மட்டும் சொன்னார்கள், இங்கு வந்தபிறகுதான், மீடியாக்கள் வந்து பரபரப்பாக செய்திகள் வெளிவந்த பிறகுதான் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏற்றிவந்துள்ளோம் என்பதே தெரிந்தது" என்று கூறினர்.

'சிவாஜி' திரைப்பட பாணியில் ..

ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் இடைவேளைக்குப் பின்னர் வரும் திருப்புமுனை காட்சியில் '1 ரூபாய்' நாணய தொலைபேசியில் சுமனை அழைத்துப் பேசும் ரஜினி, "சார்.. உங்க வீட்டில் நாளை முகூர்த்தம்" என்பார். அதற்கு சுமன், "என்னய்யா சொல்ற" எனக் கேட்பார். ரஜினி, "இன்கம் டாக்ஸ் துறையில் முகூர்த்தம் என்றால் வருமான வரித்துறை சோதனை. எல்லா ஆவணங்களையும் பத்திரப்படுத்திக்கவும்" என்பார்.

கிட்டத்தட்ட சிவாஜி பட பாணியில்தான் இன்று அதிகாரிகள் முகூர்த்துக்காக எனக் கூறி கார்களை முன்பதிவு செய்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x