Published : 10 Aug 2023 04:18 AM
Last Updated : 10 Aug 2023 04:18 AM

எட்டாவது இடத்தில் தருமபுரி வனக்கோட்டம் - கணக்கெடுப்பில் 144 யானைகள் வசிப்பது உறுதி

தருமபுரி வனக் கோட்டத்தில் கடந்த மே மாதம் நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள்-கோப்புப் படங்கள்

தருமபுரி: ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி முடிவுகளின்படி தமிழகத்தில் 144 யானைகளுடன் தருமபுரி வனக் கோட்டம் 8-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் வனப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி 19-ம் தேதி வரை 3 நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட 4 மாநில வனக் கோட்டங்களிலும் ஒரே நேரத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்வதன் மூலம் யானைகளின் எண்ணிக்கை குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் பெற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வனத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுக்க 1,731 வனத்துறை அலுவலர்கள் உட்பட தன்னார்வலர்களையும் சேர்த்து 2,099 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். பிரிவுகள் வாரியான கணக்கெடுப்பு, அதே பிரிவுகளில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடையாளம் காணப்பட்ட வழிகளில் நடந்து சென்று வழிகளின் இருபுறங்களிலும் யானைகளின் சாணங்களை அடையாளம் காணும் மறைமுகக் கணக்கெடுப்பு மற்றும் நீர்நிலைகளுக்கு வரும் யானைகளின் கூட்டத்தை கண்டறியும் வகையில் நீர்க்குழி கணக்கெடுப்பு என 3 நாட்களிலும் 3 வித முறைகளைப் பின்பற்றி இந்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு நடத்தப்பட்ட கணக்கெடுப்புப் பணியில் திரட்டப்பட்ட விவரங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் தொகுக்கும் பணிக்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க இவ்வாறு நடத்தப்பட்ட கணக்கெடுப்புப் பணிகளின் விவரங்கள் பெறப்பட்டு முதுமலையில் புள்ளி விவரங்களை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நிறைவுற்ற நிலையில், நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 8) இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த அறிக்கையின்படி தருமபுரி வனக் கோட்டம் 144 யானைகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உதகை வனக்கோட்டம் 444 யானைகளுடன் முதலிடத்திலும், சத்தியமங்கலம் வனக்கோட்டம் 396 யானைகளுடன் இரண்டாம் இடத்திலும், மசினகுடி வனக் கோட்டம் 346 யானைகளுடன் மூன்றாம் இடத்திலும், ஹாசனூர் வனக் கோட்டம் 272 யானைகளுடன் நான்காம் இடத்திலும், திருப்பூர் வனக் கோட்டம் 211 யானைகளுடன் ஐந்தாம் இடத்திலும், கோயம்புத்தூர் வனக்கோட்டம் 190 யானைகளுடன் ஆறாம் இடத்திலும், ஈரோடு வனக் கோட்டம் 158 யானைகளுடன் ஏழாம் இடத்திலும் உள்ளன.

பொள்ளாச்சி கோட்டம் 126 யானைகள், அம்பை கோட்டம் 116 யானைகள், ஓசூர் கோட்டம் 105 யானைகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கூடலூர் கோட்டங்கள் தலா 80 யானைகள், களக்காடு கோட்டம் 71 யானைகள், மேகமலை கோட்டம் 62 யானைகள், கன்னியாகுமரி கோட்டம் 49 யானைகள், திருநெல்வேலி கோட்டம் 37 யானைகள், திண்டுக்கல் கோட்டம் 28 யானைகள், கொடைக்கானல் கோட்டல் 25 யானைகள், நீலகிரி கோட்டம் 21 யானைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த 2023 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மொத்தம் 2,961 யானைகள் உள்ளன.

இவ்வாறான ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 2002-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3,737 ஆக இருந்த யானைகள் 2007-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 3867 ஆக அதிகரித்திருந்தது. அதேபோல, 2012-ம் ஆண்டில் 4,015 ஆக அதிகரித்திருந்தது. 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2761 ஆக சரிந்திருந்தது. இந்நிலையில் தற்போது 2,961 யானைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

2017-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பு புள்ளிவிவரம் மற்றும் தற்போதைய புள்ளிவிவரம் ஆகியவற்றின்படி தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 200 யானைகள் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 2012 மற்றும் 2017-ம் ஆண்டுகளின் கணக்கெடுப்பு விவரங்களின்படி 1,254 யானைகள் குறைந்திருந்தன. இவற்றில்,குறிப்பிட்ட அளவு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருந்ததாலும், கணிசமான எண்ணிக்கை கொண்ட யானைகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றதாலும் இந்த எண்ணிக்கை குறைவு ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x