Last Updated : 10 Aug, 2023 12:00 AM

 

Published : 10 Aug 2023 12:00 AM
Last Updated : 10 Aug 2023 12:00 AM

"பணம் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைக்கே செல்ல முடியும்" - உயர் நீதிமன்றம்

மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை வசதிகளும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வசதிகளும் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு வில்,"என் கணவர் வேல்முருகன். நான் பிரசவத்துக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 17.5.2014ல் சேர்ந்தேன். மறுநாள் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் முதலில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 20.5.2014-ல் குழந்தை இறந்தது. என் குழந்தை இறப்புக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவரும், செவிலியரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "வாழ்வின் பல்வேறு நிலைகளில் மருத்துவ துறையினரின் சேவை தேவைப்படுகிறது. நம் வாழ்வில் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றிமையாத பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கிடைப்பதில்லை. காவேரி, அப்போலோ மருத்துவமனைகளின் கதவுகள் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே திறக்கும். பணம் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உடல் நிலையை பதிவு செய்ய வேண்டும். உள்நோயாளிகளாக இருந்தால் சிகிச்சை முடிந்து திரும்பும் போது வழங்கப்படும் குறிப்பேட்டில் அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். இப்போது டிஜிட்டல் உலகில் இருக்கிறோம். டிஜிட்டல் வசதியில் அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதில் எந்த சிரமும் இல்லை.

நோயாளிக்கு தனது சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கேட்க உரிமை உண்டு. ஆவணங்களை முறையாக பராமரிப்பது என்பது மருத்துவ பணிகளின் உள்ளடக்கமாகும். அரசு மருத்துவமனைகளில் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியாது.

அவ்வாறு நிறுத்தி வைப்பது தொழில் சட்ட மீறலாகும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவமனைகளும் நோயாளி கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும். தராமல் இருப்பது நோயாளிகளின் உரிமையை மீறும் செயலாகும்.

இந்தியாவில் ஆயிரம் பிரசவங்களில் 26.619 சதவீத குழந்தைகள் இறப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மூச்சுத் திணறலால் 9.9. சதவீத இறப்புகள் நிகழ்கின்றன. மூச்சுத் திணறலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தாயாரின் உடல் நிலை கூட காரணமாக இருக்கலாம். இதற்காக மொத்த சம்பவத்துக்கும் மரு்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தான் காரணம் என சொல்ல முடியாது.

பரமக்குடி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லாமல் இருந்துள்ளது. அங்கு வெண்டிலேட்டர் இருந்திருந்தால் மனுதாரரின் குழந்தையை வெகு தொலைவில் உள்ள மதுரைக்கு சிகிச்சைக்கு அனுப்பியிருக்க தேவையில்லை. இதனால் மனுதாரருக்கு 8 வாரத்தில் ரூ.75 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் அனைத்து அடிப்படை வசதியும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வசதிகளும் இருக்க வேண்டும்." இவ்வாறு கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x