Last Updated : 09 Aug, 2023 04:41 PM

 

Published : 09 Aug 2023 04:41 PM
Last Updated : 09 Aug 2023 04:41 PM

‘நியோ மேக்ஸ்’ மோசடி | “எங்களது முதலீடு தொகை கிடைக்குமா?” - அச்சத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்

மதுரை: 'நியோ மேக்ஸ்' மீது தொடரும் புகார்களை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் அடுத்தடுத்து கைதாவதைத் தொடர்ந்து, முதலீட்டு தொகை திரும்பக் கிடைக்குமா என்று அச்சத்தில் உள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு 'நியோ மேக்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 20-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் செயல்பட்டன. இந்நிறுவனங்கள் மூலம் கூடுதல் வட்டி தருகிறோம், குறிப்பிட்ட ஆண்டில் முதலீட்டு தொகைக்கு கூடுதலாக ஒரு மடங்கு வழங்குவதாகவும் ஆசைவார்ததைகளை முதலீடுகளை பெற்றனர். இதன் மூலம் பல கோடி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு காவல் நிலையம் உட்பட பல்வேறு மாவட்டத்திலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 'நியோ மேக்ஸ்' மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் காரியாப்பட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் நெல்லையிலுள்ள நிறுவனம் ஒன்றின் இயக்குநர்கள் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தனிப் படையினர் தொடர்ந்து தேடுகின்றனர்.

இதற்கிடையில், ராமநாதபுரம் பகுதி உச்சிப்புளி அருகே அதியமான் தீவு பகுதியில் வழக்கில் தொடர்புடைய சிலர் தங்கியிருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றனர். போலீஸார் வருவரை முன்கூட்டியே தெரிந்த கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பினர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம், மருளூத்து மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி(50) என, தெரிந்தது. இவரும் துணை நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருப்பதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோர் கூறியது: ''உறவினர், நண்பர்கள், சமூகத்தினர் என்ற போர்வையில் பலர் முதலீடு செய்து சிக்கியுள்ளோம். எங்களிடம் வசூலித்த தொகையில் பல கோடியில் நிலம் உள்ளிட்ட சில சொத்துகள் வாங்கியுள்ளனர். ஆனாலும், வெளிநாடுகளில் ரூ.500 கோடி வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த நபர் திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இந்த நபர் ஏற்கெனவே திருச்சியிலுள்ள தற்போதைய அமைச்சர் ஒருவரை எதிர்த்து சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டவர். அரசியல் முக்கிய புள்ளிகளை பயன்படுத்தி கைதில் இருந்து அவர் தப்பி வருகிறார்.

இதனிடையே, இவ்வழக்கில் தொடர்பு நபர்களின் 200-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் அக்கணக்குகளில் ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் இருப்பு இருப்பதாக தெரிகிறது. வீடு, அலுவலகங்களிலும் பெரியளவில் பொருட்களை கைப்பற்றியதாக தெரியவில்லை. மேலும், நிறுவனங்களின் இயக்குநர்கள் ஏற்கெனவே திட்டமிட்டு நிறுவனங்களில் பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட ஆவணங்களை காணாமல் செய்து இருக்கும் தகவல் கிடைக்கிறது. இதுபோன்ற சூழலில் எங்களது முதலீடு தொகை கிடைக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனாலும்,போலீஸார் தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கை மீது நம்பிக்கை உள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x