Published : 08 Aug 2023 07:23 PM
Last Updated : 08 Aug 2023 07:23 PM

பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க இலங்கை துணை தூதரகம் செல்ல அனுமதி: முருகனுக்காக நளினி மனு

கோப்புப்படம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை சென்றுவர அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் சார்பில் அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவில், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு சிறைகளை விட முகாமின் நிலை மற்றும் சூழல் கடுமையாக உள்ளன.

லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறோம். தற்போதைய நிலையில் முருகனுடைய சொந்த நாடான இலங்கையில் அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அவர் அங்கு செல்ல முடியாது.

எனவே சர்வதேச பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு செல்வதற்காக சிறப்பு முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு சென்றுவர தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டுமா? அல்லது தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா? என தலைமை நீதிபதியின் உத்தரவை பெறும்படி, நீதிமன்ற பதிவுதுறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x