Published : 08 Aug 2023 06:52 PM
Last Updated : 08 Aug 2023 06:52 PM

விதிகளை மீறாமல் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலமுருகன், அமல்ராஜ், நாகேஸ்வரி உள்ளிட்ட 24 பேர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்தது. இதன்படி, குறைந்த விற்பனை உள்ள கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுக்கப்பட்டன.

அதன்படி 500 கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை. கடைகளை மூடுவதற்காக வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, தங்களது கட்டடங்களில் செயல்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x