Published : 08 Aug 2023 05:38 AM
Last Updated : 08 Aug 2023 05:38 AM

கனடாவில் சர்வதேச காவல் தடகள போட்டி - தங்கம் உட்பட 3 பதக்கங்கள் வென்ற சென்னை பெண் தலைமை காவலர்

சர்வதேச காவல் தடகள போட்டி யில் 3 பதக்கங்கள் வென்ற தலைமை காவலர் லீலாஸ்ரீ.

சென்னை: சென்னையை சேர்ந்த பெண் தலைமைக் காவலர் கனடாவில் நடந்த சர்வதேச காவல் துறை தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச அளவில் காவல் துறை, தீயணைப்பு, மீட்பு படையினருக்கான ‘போலீஸ் அண்ட் ஃபயர்’ விளையாட்டு போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி வரை நடந்தன. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 8,500-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், தமிழகத்தில் இருந்தும் காவல் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், சென்னையில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கரங்கள் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் லீலாஸ்ரீ 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

காவல் துறைக்கு பெருமை: 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டிகள் கொண்ட ‘ஹெப்டத்லான்’ பிரிவில் தங்கம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி, உயரம் தாண்டுதலில் வெண்கலம் என 3 பதக்கங்கள் பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கனடா சென்றுள்ள காவல் குழுவினர் வரும் 14-ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x