Published : 19 Nov 2017 08:41 AM
Last Updated : 19 Nov 2017 08:41 AM
ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 8 நிமிடங்களில் பத்திரமாக மீட்கப்பட்டது.
பொன்னேரி தாலுகா, கூடுவாஞ்சேரி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (20). ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் 9-வது வார்டில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் செல்வி கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு பெண், செல்வியின் குழந்தையை கடத்திச் செல்ல முயன்றார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தனியார் காவலர்கள் யோகராஜ், ராணி ஆகியோர் விரைந்து சென்று குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை விரட்டிப் பிடித்து குழந்தையை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஆர்எம்ஓ அனிதாவின் புகாரின் பேரில், ராயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ரம்ஜான் பேகம் (36) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான மற்றொரு பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரம்ஜான் பேகத்திடம் சிலர், குழந்தையை கடத்திக்கொண்டு வந்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி அவர் குழந்தையை கடத்தியுளார். கடத்தச் சொன்னது யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தை 8 நிமிடங்களில் மீட்கப்பட்டது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT