Published : 05 Nov 2017 10:54 AM
Last Updated : 05 Nov 2017 10:54 AM

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பங்களுக்குஜி.ராமகிருஷ்ணன், தினகரன் நிதியுதவி

கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன், தினகரன் ஆகியோர் நேற்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினர்.

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் கடந்த 1-ம் தேதி மின்சாரம் பாய்ந்து பாவனா, யுவஸ்ரீ ஆகிய 2 சிறுமிகள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இரு சிறுமிகளின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை எச்சரிக்கையை அக்டோபர் மாதமே வழங்கியபோதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல், மெத்தனமாக இருந்ததால்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வரும் 7-ம் தேதி அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2015-ல் பெருவெள்ளம், 2016-ல் வார்தா புயல் என பல்வேறு பேரிடர்களை சந்தித்தும், உரிய படிப்பினையை தமிழக அரசு கற்கவில்லை. உடனடியாக தரைமட்டத்தில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

தினகரன் ஆறுதல்

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏபி.வெற்றிவேல் ஆகியோர், குழந்தைகளை இழந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தினகரன், இரு குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:

இப்பகுதி, பெரம்பூர் தொகுதியில் வருகிறது. இத்தொகுதி எம்எல்ஏவாக பி.வெற்றிவேல் இல்லாவிட்டாலும், அவரது சொந்த நிதியில் இருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர் கடந்த 2016 ஜூலையிலேயே, இப்பகுதியில் ஆய்வு செய்து, 24 மின் பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என்று மின்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் மின்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், மழையால் சென்னை பாதிப்புக்கு உள்ளாகி இருக் காது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x