Published : 24 Nov 2017 09:28 AM
Last Updated : 24 Nov 2017 09:28 AM

சென்னை ஐஐடி வளாக நேர்முகத் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது: முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் பங்கேற்பு

சென்னை ஐஐடி வளாக நேர்முகத் தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. இதில், முதல்முறை யாக ஆப்பிள் நிறுவனமும் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்களை எடுக்கவுள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஐஐடி-யின் 2017-ம் ஆண்டுக்கான வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. இதில், 270-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளன. இதில், மைக்ரோசாப்ட், சாம்சங், இன்டெல், மஹிந்திரா, பஜாஜ், எல் அண்ட் டி, யுஐடிஏஐ, நாஸ்டாக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக இந்த ஆண்டுதான் வளாக நேர்முகத் தேர்வில் பங்கேற்கிறது.

மொத்த நிறுவனங்களில் 43 சதவீதம் பொறியியல், ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்தவை. 23 சதவீதம் திட்டம் மற்றும் ஆலோசனை வழங்கும் பிரிவைச் சேர்ந்தவை. 32 சதவீதம் ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவை. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகும். இந்த முதல்கட்ட வளாக நேர்முகத் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x