Published : 01 Aug 2023 04:10 AM
Last Updated : 01 Aug 2023 04:10 AM

மகளிர் உரிமை தொகை திட்ட ஆய்வு நிகழ்வுகளில் தி.மலை ஆட்சியர் நிற்க வைக்கப்பட்டதால் சலசலப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வடதண்டலம் ஊராட்சியில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை திட்ட பதிவு முகாம் ஆய்வு பணியின்போது அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் உட்கார்ந்திருக்க, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் அருகே ஆட்சியர் பா.முருகேஷ் நின்று கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் உரிமை தொகை திட்ட பதிவு முகாம் ஆய்வு நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் உட்கார்ந்திருக்க, ஆட்சியர் பா.முருகேஷ் நின்று கொண்டி ருந்தது அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கலைஞரின் உரிமை தொகை திட்ட பதிவு முகாம் கடந்த ஜுலை மாதம் 24-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இப் பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார் வலர்களுக்கு அறிவுரை வழங்கி யும், திட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து வரு கிறார்.

ஆய்வு பணியின் போது, மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்திருக்க திமுக நிர்வாகிகளுடன் ஆட்சியர் பா.முருகேஷ் நின்று கொண் டிருந்தது அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகளுக்கும் மற்றும் மக் களுக்கும் மிகப்பெரிய பாலமாக இருப்பவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் அதிகாரியாக உள்ள ஆட்சியர்கள். மக்கள் நலத் திட்டங்களை தொய்வின்றி கொண்டு சென்று சேர்ப்பவர்கள்.

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பவர்கள். மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை துரிதமாக முன்னேடுத்து செல்பவர்கள். ஆட்சியரின் கையொப்பமின்றி, மாவட்டத்தில் எந்த ஒரு அசைவும் நிகழாது. இத்தகைய சிறப்பு மிக்க பணியில் இருப்பவர்தான் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ். இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்ட பதிவு முகாமை ஆய்வு செய்து வரும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பயணிக்கிறார்.

இந்த ஆய்வில், அவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. இருக்கைகளை ஒதுக்காமல், நிற்க வைக்கப் பட்டுள்ளார். ஓரிரு இடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டிருக்கலாம். அல்லது நாற்காலி இல்லாமல் இருந்திருக்கலாம். கடந்த 2 நாட்களாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற அனைத்து ஆய்வு நிகழ்வுகளில், திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நின்று கொண்டே இருந்தது வேதனையளிக்கிறது.

அமைச்சர் எ.வ.வேலு, சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் உட்கார்ந்திருக்க, ஆட்சியர் மட்டும் தொடர்ந்து நின்றிருந்ததை ஏற்க முடியாது. அண்டை மாவட்டங்களில் அமைச் சர்கள் ஆய்வு செய்யும் போது, அவர்களுடன் ஆட்சியர்கள் உட்கார்ந்திருப்பதை காண முடிகிறது.

எனவே, இந்நிகழ்வு களில், ஆட்சியர் பா.முருகேஷ் அவமதிக்கப்பட்டதாக கருது கிறோம். உட்காருவதை ஆட்சியரே தவிர்த்து இருந்தாலும், அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் உட்கார வைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த நிலை எதிர்காலத்தில் தொடரக்கூடாது” என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறும்போது, “ஆய்வு பணியில் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதனால், அவர்கள் அமர நாற்காலிகளை ஏற்பாடு செய்வது இயல்பு. ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால், ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இட வசதியை காரணமாக கூறலாம். இருப்பினும், ஆட்சியர் என்ற பதவிக்கு மரியாதையை, ஜனநாயகத்தில் கொடுக்க வேண்டும். அதன்படி, அவர் உட்கார்ந்திருக்க வேண்டும் அல்லது உட்கார வைக்கப் பட்டிருக்க வேண்டும். இதுதான் சரியான பார்வையாக இருக்கும். ஆட்சியர் அலுவலக ஊழியர்களின் ஆதங்கம் நியாமானதுதான்” என்றார்.

ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “கலைஞரின் உரிமை தொகை திட்டத்துக்காக பெறப்படும் விண்ணப்பங்களை ‘ஆன்லைன்’ மற்றும் ‘ஆப்லைன்’ மூலமாக பதிவு செய்யப்படுகிறது. முகாமில் பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை குறித்து அமைச்சரிடம் விளக்குவதற்காக, அவர் அருகே நின்றிருந்தேன்“ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x