Published : 01 Aug 2023 05:44 AM
Last Updated : 01 Aug 2023 05:44 AM

செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் மின்கலன் பரிசோதனை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் தனியார் நிறுவன மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,10,561 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2,73,448 கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், 2012-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 125 ஏக்கரில் மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை நிறுவியது. இது சர்வதேச அளவிலான, மோட்டார் வாகனம் மற்றும் டிராக்டர் தயாரிப்புகளின் முதலாவது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.

இந்த மையம் சமீப காலங்களில் எக்ஸ்யுவி 500, தார், எக்யுவி 300, கேயுவி 100, ஆல்டுராஸ், டியுவி 300 மற்றும் அர்ஜுன் நோவோ, யுவோ மற்றும் ஜிவோ போன்ற பல்வேறு புதிய வகை வாகனங்கள் மற்றும் டிராக்டர்களை உருவாக்கியுள்ளது. மேலும், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் 454 ஏக்கரில் இந்நிறுவனம் அமைத்துள்ள சோதனைத் தடத்தில், வாகன சவாரி, கையாளுதல் மற்றும் பிற திறன் சரிபார்ப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம், 2022 ஜூலை மாதம் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 2022 ஏப்ரல் முதல் 4 ஆண்டுகளுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு மேற்கொள்வதாகவும், குறைந்தபட்சம் 850 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 210 கோடியில் மஹிந்திரா ஆராய்ச்சி மையம், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில் மஹிந்திரா எஸ்யுவி வாகனங்களுக்கான பரிசோதனைத் தளம் (MSPT) மற்றும் கோவையில் ரூ.12 கோடியில் தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை அமைக்க முன்வந்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஓராண்டிலேயே இதன் தொடக்க விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மஹிந்திரா நிறுவனம் சார்பில், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில், மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மையம் நிறுவும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்நாட்டினார்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தேசிய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இத்தகு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், இந்த துறையில் தமிழகத்தை வலுப்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன உயர் அலுவலர்கள் ஆர்.வேலுசாமி, அபாந்தி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x